ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் எம்.சி. சண்முகையாவை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.
தூத்துக்குடி ஸ்பிக்நகர், மாப்பிள்ளையூரணி, செக்காரக்குடி ஆகிய பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசுகையில், கடந்த மாதம் 18 ஆம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்ப வாக்களித்தீர்கள். தற்போது மே 19 ஆம் தேதி முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை வீட்டுக்கு அனுப்ப வாக்களியுங்கள்.
தமிழகத்தில் மக்களுக்கான எந்த நல்ல திட்டங்களும் நடைபெறவில்லை. தனது ஆட்சிக் காலத்தில் 38 ஆயிரம் போராட்டம் நடைபெற்றதாக முதல்வர் கூறுவது ஒரு சாதனையா?. மக்களவை தேர்தல், சட்டப் பேரவை இடைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், திமுக வேட்பாளர் எம்.சி. சண்முகையா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.என். நேரு, மா. சுப்பிரமணியன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், ஆஸ்டின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக இளைஞரணி மாநில துணைச் செயலர் எஸ். ஜோயல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.