ஆறுமுகனேரி, ஆத்தூர், காயல்பட்டினம் பகுதிகளில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் தொடர்பாக காவல்துறையினர் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
திருச்செந்தூர் உள்கோட்ட த்திற்கு உள்பட்ட பெட்ரோல் விற்பனை நிலையங்களில் ஜூன் 1 ஆம் தேதி முதல் தலைக்கவசம் அணியாமல் வரும் இரு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் வழங்கப்படாதென திருச்செந்தூர் துணை கண்காணிப்பாளர் பாரத் அறிவித்திருந்தார்.
இது குறித்து, ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதிகளில் ஆட்டோ மூலம் காவல்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு ஒலி பெருக்கி மூலம் அறிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், ஆறுமுகனேரி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் காவல்துறையினர் பங்கேற்றனர். பிரசாரத்தின் போது, விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.