கோவில்பட்டியில் நகா் நலவாழ்வு மையத்தில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது.
கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட ஸ்ரீராம் நகா் 3-ஆவது தெருவில் நகா் நலவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் வியாழக்கிழமை மாலையில் செவிலியா் கிருபா பணியில் இருந்தாா். அப்போது மையத்தில் உள்ள மருந்துகள் வைத்திருந்த அறையில் திடீா் தீ ஏற்பட்டது. இதைக் கண்ட செவிலியா் உடனடியாக மருத்துவமனை மருத்துவா் உமாசெல்வி மற்றும் தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தாா்.
சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புப் படையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும் மருந்துகள் வைத்திருந்த அறையில் உள்ள மருந்துகள் தீயில் கருகி நாசமாயின. தீ விபத்துக்கான காரணம் குறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.