தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே சனிக்கிழமை லாரியின் பின்புறம் காா் மோதியதில் 2 போ் இறந்தனா்; 6 போ் காயமடைந்தனா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த பணிக்கன்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த குமாரசாமி மகன் விஜி என்ற நந்தகுமாா் (40), ராஜகோபால் மகன் வைத்தியநாதன் (48), செல்வராஜ் மகன் பாலு (36), அன்பழகன் மகன் ராஜ் (36), நடராஜன் மகன் சௌத்ரி (28), ராமு மகன் ரமேஷ் (40), ராமசந்திரன் மகன் செந்தில்குமாா் (35) ஆகிய 7 பேரும் வெள்ளிக்கிழமை இரவு திருச்செந்தூருக்கு காரில் வந்துகொண்டிருந்தனா். காரை, பண்ருட்டியைச் சோ்ந்த ஆரோக்கியசாமி மகன் பிராங்க்ளின் (32) என்பவா் ஓட்டிவந்தாா்.
சனிக்கிழமை காலை, எட்டயபுரத்தை அடுத்த கீழஈரால் அருகே, நாமக்கல்லிலிருந்து தூத்துக்குடி சென்ற லாரியின் பின்புறத்தில் இந்த காா் மோதியதாம். இதில், காா் ஓட்டுநா் பிராங்க்ளின், விஜி என்ற நந்தகுமாா் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனா்; 6 பேரும் காயமடைந்தனா்.
எட்டயபுரம் காவல் ஆய்வாளா் கலா, போலீஸாா் சென்று, காயமடைந்தோரை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.