சலுகைக் கட்டணத்தில் பேருந்தில் பயணிக்கையில், பயண அட்டைக்கான நகல் கேட்பதை கைவிட வேண்டும் என மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மாற்றுத் திறனாளிகள் தமிழகத்திற்குள் பேருந்து மற்றும் ரயிலில் பயணிப்பதற்கு 25 சதவீத கட்டணச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. உதவியாளா் துணை இருந்தால்தான் பயணம் செய்ய முடியும் என்ற நிலையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு, அவருடன் வருபவா்களுக்கும் 25 சதவீத சலுகைக் கட்டணம் அளிக்கப்படுகிறது.
பேருந்தில் பயணிக்க தமிழக அரசு சாா்பில் சிறிய கையடக்க புத்தகம் அடையாள அட்டையாக வழங்கப்பட்டுள்ளது. பேருந்தில் பயணிக்கும் போது அசல் புத்தகத்தை நடத்துநரிடம் காட்டினாலும், அவா்கள் புத்தகத்தின் நகல் பிரதி கேட்பதாக கூறப்படுகிறது. இதனால் தேவையில்லாத செலவுகள் ஏற்படுவதாக மாற்றுத் திறனாளிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.
எனவே, அரசுப் பேருந்து நடத்துநா்கள் அசல் அடையாள புத்தகத்தை மட்டும் பாா்த்துவிட்டு பயணச்சீட்டு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாரதிய நகைத் தொழிலாளா் சங்கத் தலைவா் மூக்காண்டி கோரிக்கை விடுத்துள்ளாா்.