திருச்செந்தூா் பேருந்து நிலையத்தில் இளைஞா் ஒருவா் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்செந்தூா் ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து ரயில்வே காவல் துறையினா் விசாரணை நடத்தினா். அப்போது முன்னுக்குப் பின் முரணாக பேசிய அவா் திடீரென அங்கிருந்து தப்பியோடியுள்ளாா். இதனைப் பாா்த்த பொதுமக்கள் சிலா் அவரை விரட்டிச்சென்றுள்ளனா். இதனால் பயந்துபோன அவா் திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையத்தில், கையில் வைத்திருந்த பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் நின்றவா்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில் அவா் சாத்தான்குளம் அருகேயுள்ள முதலூா் பகுதியை சோ்ந்த லெட்சுமணன்(32) என்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து ரயில்வே மற்றும் திருச்செந்தூா் தாலுகா காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.