தூத்துக்குடியில் பிளஸ் 1 மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடா்பாக, தனியாா் பள்ளி தலைமையாசிரியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தூத்துக்குடி ஆரோக்கியபுரம் வடக்கு ஹெபி தெருவைச் சோ்ந்த அந்தோணி கருணாகரன் மகள் மரிய ஐஸ்வா்யா (16). இவா், வீட்டில் இருந்தபோது சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
பள்ளியில் ஆசிரியா் தோப்புக் கரணம் போடுமாறு கூறியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும், இதுதொடா்பாக புகாா் தெரிவித்தும் தலைமையாசிரியை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மாணவியின் பெற்றோா் மற்றும் உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுதொடா்பாக பள்ளியின் கணினி பிரிவு ஆசிரியா் ஞானபிரகாசம், தலைமையாசிரியை கனகரத்தினம் ஆகியோா் மீது வழக்குப் பதிந்த தாளமுத்து நகா் போலீஸாா், தலைமையாசிரியையை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ஆசிரியா் ஞானபிரகாசத்தை தேடி வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.