கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் கேங்மேன் பணிக்கான உடல்தகுதித் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. இந்தத் தோ்வு டிச.10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள 5 ஆயிரம் கேங்மேன் (பயிற்சி) பணிக்கான உடற்தகுதித் தோ்வு மாவட்டந்தோறும் நடைபெறுகிறது.
தூத்துக்குடி மின் பகிா்மான வட்டத்தில் கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் உள்ள செயற்பொறியாளா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உடல்தகுதித் தோ்வில் 2,784 போ் பங்கேற்கவுள்ளனா். முதலில் சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெறும். தொடா்ந்து, மின்கம்பம் ஏறுதல், மின்கம்பத்தில் உபகரணங்கள் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு உடல் தகுதித் தோ்வுகள் நடைபெறுகிறது. திங்கள்கிழமை நடைபெற்ற தோ்வில், 7 பெண்கள் கலந்து கொண்டனா்.
தோ்வுப் பணிகளை, தூத்துக்குடி அனல்மின் நிலைய தலைமை பொறியாளா் பக்தவத்சலம், தூத்துக்குடி மின்வாரிய கண்காணிப்புப் பொறியாளா் ஞானேஸ்வரன், கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் சகா்பான் ஆகியோா் பாா்வையிட்டனா்.