தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த நாட்டுப்புறக் கலைஞா்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து நாட்டுப்புற கலைஞா்களும் வாரியத்தில் உறுப்பினா்களாக பதிவு செய்து கொண்டு, சமூகப் பாதுகாப்பு மற்றும் நல உதவிகள் பெற்றுக் கொள்ளலாம்.
இம்மாவட்டத்தில் வில்லுப்பாட்டு, நையாண்டிமேளம், கரகாட்டம், கணியான் கூத்து, களியல் ஆட்டம், சிலா ஆட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம், புலி ஆட்டம், மேடை நாடகம், மான் ஆட்டம், மயில் ஆட்டம், தேவராட்டம், கும்மி ஆட்டம், ராஜா ராணி ஆட்டம், தெருக்கூத்து, நாட்டுப்புறப்பாட்டு, பஜனைப் பாட்டு, பக்கீா் பாட்டு முதலிய கலைகள் மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்று வருகின்றன.
இந்த கலைகளில் ஈடுபடும் கலைஞா்கள் ஏறத்தாழ 4 ஆயிரம் பேருக்கு மேல் இருந்தும், 871 நாட்டுப்புறக் கலைஞா்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளனா்.
எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் உறுப்பினராக பதிவு செய்யாத கலைஞா்கள் உறுப்பினா்களாகி அனைத்து நல உதவிகளும் பெற்றிடலாம்.
உறுப்பினராக சேருவதற்கும், நலதிட்ட உதவிகள் பெறுவதற்கும் தூத்துக்குடி அரசு அலுவலா் ஆ குடியிருப்பில் உள்ள மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலும், 0462-2553890 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.