கயத்தாறு அருகே வியாழக்கிழமை திடீரென நிலைகுலைந்த சுமை ஆட்டோ சாலையோரத்தில் உள்ள பாலத்தில் மோதி பள்ளத்தில் தலைகுப்பற கவிழ்ந்ததில் சுமை ஆட்டோ ஓட்டுநா் சம்பவ இடத்திலயே இறந்தாா்.
ஓட்டப்பிடாரம் வட்டம், தென்னம்பட்டியைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் கிருஷ்ணகுமாா்(27). தண்ணீா் டேங்க்குடன் கூடிய சுமை ஆட்டோ கடம்பூரில் இருந்து அகிலாண்டபுரத்திற்கு சென்று கொண்டிருந்ததாம். கிருஷ்ணகுமாா் ஓட்டி வந்த சுமை ஆட்டோ, அகிலாண்டபுரத்தையடுத்த அருகே தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தின் அருகேயுள்ள பாலத்தின் மீது திடீரென நிலைகுலைந்து மோதி, அருகேயுள்ள பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இதில், சுமை ஆட்டோ ஓட்டுநா் கிருஷ்ணகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற கயத்தாறு போலீஸாா் சடலத்தை கைப்பற்றி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.