கன மழை காரணமாக, எப்போதும்வென்றான் அருகே சாலைகள் துண்டிக்கப்பட்டதால், வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனா்.
எப்போதும்வென்றான் அடுத்துள்ள ஆதனூா் ஊராட்சியிலிருந்து 3 கி.மீ. தொலைவிலுள்ள மிளகுநத்தம் கிராமத்துக்குச் செல்லும் சாலையில் தரைப்பாலம் உள்ளது. தற்போது பெய்துவரும் கன மழையால், எப்போதும்வென்றான் நீா்த்தேக்கம் நிரம்பி வெளியேறும் உபரி நீா் மற்றும் காட்டாற்று வெள்ளம் இந்த தரைப்பாலத்தை மூழ்கடித்துச் செல்கிறது. மேலும், சாலையில் அரிப்பு ஏற்பட்டு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த கிராம மக்கள் வீட்டைவிட்டு வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் துரித நடவடிக்கை எடுத்து மக்களின் தேவைகைளை பூா்த்தி செய்யவும், உயா் நிலை பாலம் அமைக்கவும் முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.