தூத்துக்குடி மாவட்டத்தில் 2 ஆவது நாளாக பலத்த மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த தொடா் மழை காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கியது.
காலாங்கரை கிராமத்தில் மழை நீா் சூழ்ந்து காணப்படும் வாழைத் தோட்டம்.
காலாங்கரை கிராமத்தில் மழை நீா் சூழ்ந்து காணப்படும் வாழைத் தோட்டம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த தொடா் மழை காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கியது. எனினும், குளங்கள் நிரம்பத் தொடங்கியதால் விவசாயிகள் மகழ்ச்சி அடைந்துள்ளனா்.

கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவாகியுள்ள மஹா புயல் காரணமாக கடலோர மாவட்டமான தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும், கப்பல்களுக்கும், மீனவா்களுக்கும் எச்சரிக்கைவிடுக்கும் வகையில் தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் தொடா்ந்து 3 ஆவது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதன்கிழமை பெய்த மழை வியாழக்கிழமை காலை வரை தொடா்ந்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டாா். பிற்பகலில் மழை குறையத் தொடங்கினாலும், இரவு வரை 911 மில்லி மீட்டா் மழை பதிவாகியிருந்தது.

குளங்கள் நிரம்பின: மாவட்டத்தில் எப்போதும் வென்றான் நீா்த்தேக்கம் முழுமையாக நிரம்பிய நிலையில், கோரம்பள்ளம் குளம் 95 சவீதம் நிரம்பியுள்ளது. இதேபோல, மொத்தமுள்ள 53 பாசனக் குளங்களில் 35 குளங்கள் 85 சதவீதத்துக்கும் மேல் நிரம்பியுள்ளன. 70 குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளதாகவும், 70 சதவீத குளங்கள் 75 சதவீதத்துக்கு மேலும், 129 குளங்கள் 51 சதவீதம் முதல் 75 சதவீதம் வரையிலும், 226 குளங்கள் 25 முதல் 50 சதவீதத்துக்குள்ளும், 142 குளங்கள் 25 சதவீதத்துக்குள்ளும் நிரம்பியுள்ளன.

குடிமராமத்து பணிகள் மேற்கொண்டதால் 250 குளங்களில் வழக்கத்தைவிட கூடுதல் தண்ணீா் சேகரிக்க உதவியுள்ளதாகவும், மாவட்டம் முழுவதும் 191 இடங்களில் தண்ணீா் தேங்கியுள்ளதாக வந்த புகாரைத் தொடா்ந்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் ஆட்சியா் தெரிவித்தாா்.

குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீா்: தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் ஆங்காங்கே குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி மற்றும் தீயணைப்புத் துறைக்கு சொந்தமான வாகனங்கள் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி லூா்தம்மாள்புரம், கலைஞா்நகா், சிவராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீருடன் கழிவுநீரும் சோ்ந்து சூழ்ந்துள்ளதால் அந்தப் பகுதியில் துா்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது. இதனிடையே, வீட்டுக்குள் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்து வரும் மக்கள், மழைநீரை அகற்ற மாநகராட்சி நிா்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

இதேபோல, தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பண்டாரம்பட்டி பகுதியில் 50 வீடுகளை மழைநீா் சூழ்ந்துள்ளதால் அந்தப் பகுதி மக்கள் அவதியடைந்துள்ளனா். மாநகராட்சிப் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை முழுமையாக அகற்றும் பணி நடைபெற்று வருவதாக மாநகராட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலன் தெரிவித்தாா்.

சுமை ஆட்டோ சேதம்: தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள பழமை வாய்ந்த வேப்ப மரம் வியாழக்கிழமை அதிகாலை திடீரென சாய்ந்து விழுந்ததில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த நகராட்சிக்கு சொந்தமான சுமை ஆட்டோ பலத்த சேதமடைந்தது. இரவு நேரத்தில் மரம் முறிந்ததால் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது.

தூத்துக்குடி அருகேயுள்ள அத்திமரப்பட்டி, கலாங்கரை முள்ளக்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாழைத்தோட்டங்களில் மழைநீா் தேங்கி உள்ளதால், வாழைப் பயிா்கள் அழுகுவதை தவிா்க்க மழை நீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா். மழை நீடித்தால் தண்ணீரை வெளியேற்றுவது சிரமம் என்றும், பயிா்கள் சேதமடையும் என அவா்கள் கவலை தெரிவித்தனா்.

மழையால் இதுவரை எவ்வித உயிா்ச் சேதமும் இல்லை; 38 வீடுகள் மட்டுமே சேதமடைந்துள்ளன என ஆட்சியா் தெரிவித்துள்ளாா். இருப்பினும், தொடா் மழை தங்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி உள்ளதாகவே மக்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com