எட்டயபுரம் அருகே குளத்துவாய்ப்பட்டியில் மேய்ச்சலுக்கு சென்ற 8 பசுமாடுகள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தன.
குளத்துவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகனுக்கு சொந்தமான 8 பசு மாடுகள் ஞாயிற்றுக்கிழமை மாலை அம்மா மடம் என்ற காட்டுப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றன. இரவு வெகு நேரமாகியும் மாடுகள் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து திங்கள்கிழமை காலை பாலமுருகன் மற்றும் அவரது உறவினர்கள் மாடுகளைத் தேடி காட்டுப்பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு 8 மாடுகளும் ஆங்காங்கே இறந்து கிடந்தன. மாடுகளின் வாய் மற்றும் கண்களில் ரத்தக் கசிவு இருந்தது.
இதுகுறித்து எட்டயபுரம் போலீஸாருக்கும் கால்நடைத் துறையினருக்கும் கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். போலீஸாரும் கால்நடைத் துறையினரும் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டு கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர். கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநர் சத்திய நாராயணன், கால்நடை மருத்துவர்கள் ஜோசப், கனகலட்சுமி மற்றும் குழுவினர் இறந்த கால்நடைகளை ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநர் கூறுகையில், "மாடுகளின் உடல் பாகங்கள் சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடைத் துறை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மையத்துக்கு அனுப்பி பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதன் அறிக்கை வந்த பின்னர் கால்நடைகளின் இறப்பு குறித்து முழுமையாக தெரியவரும்' என்றார்.