"ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு' என்பது மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயலாகும் என்றார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி .
தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் தொடக்கப் பள்ளியில் திங்கள் கிழமை நடைபெற்றது. தெற்கு மாவட்டத் தலைவர் ஸ்ரீராமன் தலைமை வகித்தார். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலர் ஊர்வசி அமிர்தராஜ், தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் மயூராஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியை ராணி வரவேற்றார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி 400 மாணவ, மாணவியருக்கு புத்தகப் பைகளை வழங்கினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது; மத்தியில் ஆண்டு வரும் மோடி அரசு கொண்டு வர முயற்சிக்கும் "ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' என்பது மாநில அரசின் உரிமையை தட்டிப்பறிக்கும் செயலாகும். பிரதமராக ராஜீவ்காந்தி இருந்த போது கிராமங்களுக்கும் அதிகாரம் கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான் பஞ்சாயத்து ராஜ் திட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் மோடி அரசானது கிராமங்களுக்கான அதிகாரத்தைக்கூட தில்லிக்கு பறித்துச் செல்வது தேவையற்ற செயலாகும். இது மிகவும் கண்டனத்துக்குரியது என்றார் அவர்.
நிகழ்ச்சியில், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன்துரை, மாவட்ட துணைத்தலைவர் சீனிராஜேந்திரன், வட்டாரத் தலைவர் நல்லக்கண்ணு, நகரத் தலைவர் சித்திரை, ஐஎன்டியூசி பொருளாளர் சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.