புதூர் மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகிசேதமடைந்தன.
புதூர் நெடுஞ்செழியன் தெருவைச் சேர்ந்தவர் துரைசிங்கம். இவர் புதூர் பஜாரில் மரக்கடை நடத்தி வருகிறார். மரத்தடிகளுடன், சிமென்ட் , இரும்பு கம்பிகள் என கட்டுமான பொருள்களையும் விற்பனை செய்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கடை பூட்டப்பட்டிருந்தது. இரவு 11 மணிக்கு மேல் கடையில் திடீரென தீப்பிடிக்க ஆரம்பித்ததாம். தகவல் அறிந்து, விளாத்திகுளம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, தீயை அணைக்க முயன்றனர். ஆனால், காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் கடை முழுவதும் தீ பிடித்ததாம்.
இதையடுத்து கோவில்பட்டி, அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் போராடி திங்கள்கிழமை அதிகாலை சுமார் 1.30 மணிக்கு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இதில், கடையில் இருந்த மரத்தடிகள், சிமென்ட் மூட்டைகள் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் எரிந்து சேதசமடைந்தன. இதன் மதிப்பு சுமார் ரூ. 50 லட்சமாகும். இதுகுறித்து புதூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.