மாதாவனம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா 10 நாள்கள் நடைபெற்றது.
நாசரேத் அருகே உள்ள மாதாவனம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்திருவிழா கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை 10 நாள்கள் நடைபெற்றது. முதல் நாளான கொடியேற்று விழாவுக்கு ராதாபுரம் பங்குத் தந்தை பென்சிகர் தலைமை வகித்து கொடியேற்றினார். பிரகாசபுரம் பங்குத் தந்தை அ.தோமாஸ் முன்னிலை வகித்தார். தைலாபுரம் பங்குத் தந்தை இருதயசாமி மறையுரையாற்றினார்.
திருவிழா நாள்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி நடை பெற்றது. 9-ஆம் திருநாள் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருவிழா மாலை ஆராதனை தருவைக்குளம் பங்குத் தந்தை எட்வர்ட் ஜே அடிகளார் தலைமையில் நடைபெற்றது. குரும்பூர் பங்குத்தந்தை அமல்ராஜ் மறையுரை ஆற்றினார்.
10-ஆம் திருநாளான ஞாயிறுக்கிழமை காலை 6 மணிக்கு நடைபெற்ற திருவிழா திருப்பலியில் வடக்கன்குளம் அமலிவனம் பங்குத் தந்தை ஜெபநாதன், தைலாபுரம் பங்குத் தந்தை இருதயசாமி ஆகியோர் உரையாற்றினர். மாலை 5 மணிக்கு அன்னையின் தேர் பவனி, நற்கருணை ஆசீர், கொடி யிறக்கம், சமபந்தி விருந்து ஆகியன நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை பிரகாசபுரம் பங்குத்தந்தை தலைமையில் பங்கு மக்கள் செய்திருந்தனர்.