மகாகவி பாரதியாரின் 98 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி எட்டயபுரத்தில் இளம் தாமரை கலை இலக்கிய அமைப்பு சார்பில் பாரதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன் தலைமையில் இளம் தாமரை கலை இலக்கிய அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பாரதி அன்பர்கள் உள்ளிட்டோர் பாரதி மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து பாரதி மணிமண்டப வளாகத்தில் இளம் தாமரை அமைப்பின் ஆலோசணை கூட்டம் நடைபெற்றது. இதில், பாரதி கனவு கண்ட தேசத்தை கட்டமைத்து வரும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்களை இளம் தாமரை அமைப்பின் மூலம் மக்களிடம் எடுத்துரைப்பது, பட்டிதொட்டி எங்கும் கலை இலக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
கூட்டத்தில் இளம் தாமரை கலை இலக்கிய அமைப்பின் நிர்வாகிகள் சிவகாசி பார்த்தசாரதி, கனகராஜ், ராம்கி, விஜயராகவன், ராம காளியப்பன், குகன், செல்வராஜ், மாரிமுத்து, ராமநாதன், ரவி சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.