கோவில்பட்டி பிரதான சாலையில் ஓடை மீது கட்டப்பட்ட தனிநபர் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி பிரதான சாலையில் அருள்மிகு பூவனநாதசுவாமி திருக்கோயில் தேவஸ்தானப் பயன்பாட்டிற்கு உள்பட்ட 106 கடைகள் மற்றும் தனிநபர் ஆக்கிரமிப்பில் 25 கடைகள் இருந்து வந்தன.
இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆக.17ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி ஆக.26ஆம் தேதி நடைபெற்றது. அதில், ஓடை மீது கட்டப்பட்ட தனிநபர் ஆக்கிரமிப்பு கட்டடங்களான 13 கடைகள் அகற்றப்பட்டன.
எஞ்சிய 12 கடைகள் மற்றும் தேவஸ்தானப் பயன்பாட்டிற்கு உள்பட்ட 106 கடைகளும், நீதிமன்ற வழக்கு நிலுவைக் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், தனிநபர் ஆக்கிரமிப்பு கட்டடங்களான 12 கடைகள் குறித்த நீதிமன்ற வழக்குகளில் எவ்வித தடை உத்தரவும், தற்போது வரை பிறப்பிக்கபடாததையடுத்து , வியாழக்கிழமை காலை கோட்டாட்சியர் விஜயா தலைமையில், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் ராஜூ, வட்டாட்சியர் மணிகண்டன், நிலவரித் திட்ட தனி வட்டாட்சியர் முருகானந்தம், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சூரியகலா, நகராட்சி ஆணையர் (பொ) கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலையில் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் உள்ள கடைகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.
அப்போது, டி.எஸ்.பி.ஜெபராஜ் தலைமையில், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன் மற்றும் 50 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.