தூத்துக்குடி, கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளத்தில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் சனிக்கிழமை (செப். 14) நடைபெறுகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை:
திமுகவின் துணை அமைப்பான இளைஞரணிக்கு ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு 10,000 புதிய உறுப்பினர்கள் வீதம் சேர்க்க வேண்டும் என மாநில இளைஞரணிச் செயலர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி, தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும்; தொகுதிக்கு 10,000 இளைஞர்களை உறுப்பினராக சேர்த்திட வேண்டும் என்ற இலக்கோடு சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாநகரத்தில் ராஜாஜி பூங்கா எதிரிலும், விளாத்திகுளம் பேரூந்து நிலையம் எதிரிலும், கோவில்பட்டி நகரத்தில் பழைய பேரூந்து நிலையம் எதிரில் பயணியர் விடுதி முன்பும் இந்த முகாம் நடைபெறுகிறது. இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாமுக்கு அதிகப்படியான இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.