ஓட்டப்பிடாரம் வட்டார விவசாயிகள் நீர் தேக்க தொட்டி அமைக்க அரசின் மானியம் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, ஓட்டப்பிடாரம் வட்ட வேளாண் உதவி இயக்குனர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஓட்டப்பிடாரம் வட்டத்தில் நிகழாண்டில் செயல்படுத்தப்படவுள்ள பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின், இதர திட்டங்களான துணை நிலை நீர் பாசன மேலாண்மை திட்டத்தில் நிலத்தடி நீர் பாதுகாப்பில் பசுவந்தனை, வேடநத்தம், எப்போதும்வென்றான் மற்றும் மணியாச்சி ஆகிய குறுவட்டங்களில் ஆழ்குழாய் கிணறு அல்லது துளைக்கிணறு அமைப்பதற்கு செலவிடும் தொகையில் 50 சதவீத மானியம் அல்லது அதிக பட்சமாக ரூ. 25 ஆயிரம். அனைத்து குறுவட்டாரங்களிலும் டீசல் பம்பு செட் அல்லது மின் மோட்டார் பம்பு செட் நிறுவ அதன் விலையில் 50 சதவீத தொகை அல்லது அதிகபட்சமாக ரூ. 15 ஆயிரம், நீர் பாசனக் குழாய் அமைப்பதற்கு 50 சதவீத தொகை அல்லது ஹெக்டேருக்கு அதிக பட்சமாக ரூ. 10 ஆயிரம் மற்றும் தரை நிலை நீர்த்தேக்க தொட்டி நிறுவ ஏற்படும் செலவில் 50 சதவீதம் அல்லது அதிக பட்சமாக ரூ. 40 ஆயிரம் பின்னேற்பு மானியமாக வழங்கப்பட உள்ளது. எனவே விவசாயிகள் இத்திட்டத்தில் பங்கேற்று பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.