பாபநாசத்தில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து தாமிரவருணி வடகால் பகுதி விவசாயிகள் பயன்பெற மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணித்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. எஸ்.சண்முகையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுபற்றி அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: பாபநாசம் அணையில் இருந்து தாமிரவருணி நீர்ப்பாசன விவசாயிகளின் நலன் கருதி கடந்த சில நாள்களுக்கு முன்பு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அத்தண்ணீரானது தாமிரவருணி வடகால் கரையோரப் பகுதியில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவத்தையாபுரம் பகுதி 10 ஆம் எண் மதகு வரை மட்டுமே வந்துள்ளது.
எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் வடகால் பகுதிகளான சேர்வைகாரன்மடம், கூட்டாம்புளி, குலையன்கரிசல், அத்திமரப்பட்டி மற்றும் கோரம்பள்ளம் ஆகிய குளங்களுக்கும் தேவையான நீர் கிடைத்திடவும், அதிலிருந்து முழுமையான பாசன வசதி பெற்று விவசாயிகளும் பயன்பெற்றிட தூத்துக்குடி, நெல்லை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூடுதல் அளவு தண்ணீரை உடனடியாக திறக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.