பேய்க்குளத்தில் சாலையோரம் குப்பையுடன் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆழ்வார்திருநகரி ஒன்றியம் ஸ்ரீவெங்கடேஷ்வரபுரம் ஊராட்சிக்குள்பட்ட பேய்க்குளத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையோரம் செங்குளம் விலக்கு பகுதியில் குப்பைகிடங்கு அமைக்கப்பட்டு பல்வேறு பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. அதில் மக்கும், மக்கா குப்பையென பிரித்து குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுகிறது.
இதன் அருகில் குடியிருப்பு வீடுகள் மற்றும் கோயில் உள்ளன. மேலும் சாலையில் 24மணி நேரமும் வாகனங்கள் சென்று திரும்புகின்றனர். இதில் குப்பையோடு இறைச்சி கழிவுகள், இறந்த கோழிகள், நாய்கள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசி தொற்று நோய் பரவுவதாக கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி செயலருக்கு புகார் தெரிவித்தும், குப்பைகள் அதே இடத்தில் கொட்டப்பட்டு வருவதாக கிராம மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தற்போது குப்பை கழிவுகளோடு அதன் அருகில் உள்ள மருத்துவமனையில் உள்ள மருந்து கழிவுகள், காலாவதியான ஊசி மருந்துகள் கொட்டப்பட்டு வருவதாகவும், இதனால் தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்படி இடத்தில் சுகாதாரம் மேம்பட நடவடிக்கை எடுப்பதோடு, மருத்துவக்ழிவுகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.