தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காலியாக உள்ள சி.டி.ஸ்கேன் பிரிவிற்கு மருத்துவரை நியமனம் செய்ய வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவர் கே.பி.ராஜகோபால், அமைச்சர் கடம்பூர் செ.ராஜுவிடம் அளித்த மனு: கோவில்பட்டியில் உள்ள தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் வசதி உள்ளது. எனினும், அப்பிரிவில் மருத்துவர் பணியிடம் காலியாக இருப்பதால் ஸ்கேன் எடுக்க வருவோர் அறிக்கையைப் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, சி.டி. ஸ்கேன் பிரிவுக்கு உடனடியாக மருத்துவர் நியமனம் செய்ய வேண்டும். அல்ட்ரா-ஸ்கேன் பிரிவிற்கு கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். இ.சி.ஜி. எடுப்பதற்கு உரிய செவிலியர்கள், டெக்னீசியன்களை மருத்துவமனை நிர்வாகம் பயன்படுத்த வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.