கோவில்பட்டியில் உள்ள தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் ஆண், பெண் நோயாளிகளிடம் மருத்துவமனையில் உள்ள குறைகள், சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்த அவர், மருத்துவமனை சுகாதாரமாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தார். அப்போது, மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன், மகப்பேறு சிகிச்சை பிரிவில் இருந்து பெண்கள் உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவிற்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது: ஹிந்தி மொழி திணிப்பு என்பது தமிழகத்தில் இருக்கக் கூடாது என்பது காலம் காலமாக அனைவரது கொள்கையாக உள்ளது. தற்போதுவரை இருமொழிக் கொள்கைதான் அதிமுகவின் கொள்கையாக இருந்து வருகிறது. ஹிந்தி திணிப்பு என்பது எந்தக் காலத்திலும் தமிழகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் பெற்றுத் தந்தது அதிமுக அரசுதான். ரயில்வே துறை தேர்வுகள் தமிழகத்தில் தமிழில் தான் நடத்த வேண்டும் என்ற உத்தரவை பெற்றுத் தந்துள்ளோம். தமிழ் மொழிக்கு அதிமுக அரசு என்றும் பாதுகாப்பாக இருக்கும் என்றார் அவர்.
பேட்டியின்போது, அதிமுக மாவட்ட விவசாய அணி துணைச் செயலர் ராமசந்திரன், ஆவின் பால் இயக்குநர் நீலகண்டன், அதிமுக ஒன்றியச் செயலர் அய்யாத்துரைப்பாண்டியன், நகரச் செயலர் விஜயபாண்டியன் உள்பட பலர் உடனிருந்தனர்.