தூத்துக்குடி மாவட்டத்தில் மானியத்தில் அம்மா இரு சக்கர வாகனம் பெற விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேலைக்குச் செல்லும் மகளிர் எளிதாக சென்று வரும் வகையில் 50 சதவீதம் (அதிகபட்சம் ரூ.25,000) மானியத்துடன் அம்மா இரு சக்கர வாகனம் வழங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இத்திட்டத்தின்கீழ், வாகனம் பெற விரும்புவோர் ஓட்டுநர் உரிமம் மற்றும் பழகுநர் உரிமம் பெற்ற வேலைக்குச் செல்லும் மகளிர் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பப் படிவத்தை ஊராட்சிப் பகுதிகளில் இருப்போர் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி பகுதியில் இருப்போர் பேரூராட்சி அலுவலகம், நகராட்சி பகுதியிலுள்ள மனுதாரர்கள் அந்தந்த நகராட்சி அலுவலகம், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியிலுள்ள மனுதாரர்கள் மாநகராட்சியின் நான்கு மண்டல அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க விரும்பும் நிறுவனம், முறை சாரா பணியிலுள்ள பெண்கள் மோட்டார் வாகனம் சட்டம் 1988-இன்படி, பதிவு செய்யப்பட்ட 125 குதிரைத் திறன் வாகனம் புகை பரிசோதனை விதிகளுக்குள்பட்டு 01.01.2018 க்கு பின்னர் தயாரிக்கப்பட்ட வாகனம் வாங்க வேண்டும்.
தேர்வுக் குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பயனாளிகள் 45 நாள்களுக்குள் வாகனங்களை வாங்கி உரிய ஆவணங்களுடன் தாக்கல் செய்து மானியத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் ஒரு மகளிருக்கு மட்டும் மானியம் வழங்கப்படும்.
18 முதல் 40 வயது வரையுள்ள இரு சக்கர வாகனம் உரிமம் பெற்றுள்ள ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்துக்கு அதிகமாக இருக்கும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்துடன் பிறந்த தேதிக்கான சான்று, இருப்பிடச் சான்று, உரிய அலுவலரால் வழங்கப்பட்ட இரு சக்கர வாகனம் உரிமம் நகல் அல்லது இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமத்துக்கு மனு செய்தவர்கள், நகல் வைத்துள்ளவர்கள் தேர்வாகும் நிலையில் இரு சக்கர வாகன உரிமம் நகல் தாக்கல் செய்த பின்னரே மானியத் தொகை வழங்குவதற்குப் பரிசீலிக்கப்படும்.
வேலை வழங்கும் அலுவலர் மற்றும் நிறுவனத்தால் வழங்கப்படும் வருமானச் சான்றிதழ் அல்லது சுய வருமானச் சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, 8 ஆம் வகுப்பு, அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி உள்ளவர்களின் சான்றிதழ், கடவுச்சீட்டு அளவுள்ள புகைப்படம், ஜாதிச் சான்றிதழ், உரிய அலுவலரால் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளி அடையாள அட்டை (நகல்), இரு சக்கர வாகனத்தின் விலைப்புள்ளி ஆகியவற்றுடன் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.