ஊழல் குறித்து பேச கமல்ஹாசனுக்கு என்ன தகுதி இருக்கிறது என தமிழக அமைச்சர் கடம்பூர் செ.ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி: மக்களவைத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக, வேலூர் மக்களவைத் தொகுதியில் 0.5 சதவீதம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றது. நான்குனேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். மக்களவைத் தேர்தலில் விக்கிரவாண்டி பேரவைத் தொகுதியில் அதிமுக அதிக வாக்குகள் பெற்றுள்ளது. ஆகவே, விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வெற்றி உறுதி. உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும்.
ஊழல் குறித்து பேச கமல்ஹாசனுக்கு என்ன தகுதி இருக்கிறது? அவரது திரைப்படம் வெளியானால் அதிக விலையில் டிக்கெட் விற்பனை செய்வதுதான் ஊழல் என்றும், அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யக் கூடாது என்றும் அவர் கட்டுப்பாடு விதித்தாரா? தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்கு பிறகு கட்சி ஆரம்பித்து யாரும் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. கமல்ஹாசன், அரசியலில் ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டார். அதிலிருந்து வெளியேறத் தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார். நான்குனேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு திங்கள்கிழமை (செப். 23) மாலை நேர்காணல் நடைபெறுகிறது. கூட்டணி குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும் என்றார் அவர்.
அப்போது, அதிமுக நகரச் செயலர் விஜயபாண்டியன், ஒன்றியச் செயலர்கள் வினோபாஜி, அய்யாத்துரைப்பாண்டியன், பாண்டவர்மங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் அன்புராஜ், கூட்டுறவு பண்டகசாலைத் தலைவர் ரத்தினராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக, இனாம்மணியாச்சி, இலுப்பையூரணி, மறவர் காலனியை சேர்ந்த பிற கட்சியினர் பலர் அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.