தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நேரடியாக கடனுதவி வழங்குவது குறித்து வங்கிப் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் தங்கவேல் தலைமை வகித்தார். பாரத ஸ்டேட் வங்கி உதவித் திட்ட அலுவலர் பாலகிருஷ்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், விளாத்திகுளம், புதூர் ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நேரடியாக கடனுதவி வழங்குவது, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில், வங்கி அலுவலர்கள், மகளிர் குழுப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.