விவசாயிகளுக்கு வட்டியில்லாமல் கடன் வழங்க வேண்டும் என எட்டயபுரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
மாநாட்டுக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் எஸ். நல்லையா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ராமையா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன், வட்டச் செயலர் வி. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலர் வே. துரைமாணிக்கம், மாநில துணைச் செயலர் த. இந்திரஜித், மாநில துணைத்தலைவர் இ. பெரும்படையார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலர் எஸ். அழகுமுத்துபாண்டியன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற தேசிய குழு உறுப்பினர் வ. பாலமுருகன், எட்டயபுரம் வட்டக்குழுத் தலைவர் ரவீந்திரன், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் ராமசுப்பு, கஸ்தூரி, லெனின்குமார், சிவராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தீர்மானங்கள்: விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்; மத்திய அரசு பெரும் நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் சலுகைகள் வழங்குவதை நிறுத்த வேண்டும்; விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் சுவாமிநாதன் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும்; 60 வயது முடிந்த விவசாயிகளுக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்; விவசாயிகளுக்கு வட்டியில்லாமல் கடனுதவி வழங்க வேண்டும்; விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.