தொழிலாளர்களுக்கு எதிரான புதிய சட்ட திருத்தங்களை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்டுமானத் தொழிலாளர் மத்திய சட்டத்தையும், நல வாரியங்களையும் அழித்துவிடக் கூடாது, நடைமுறையில் உள்ள சட்டப்பூர்வ உரிமைகளை பறிக்கக் கூடாது, தொழிலாளர்களுக்கு எதிரான புதிய சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. கோரம்பள்ளம் தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இப் போராட்டத்துக்கு, ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் சேது தலைமை வகித்தார். ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலர் கிருஷ்ணராஜ், செயலர் தமிழரசன், அமைப்புசாரா தொழிலாளர் சங்க பொதுச் செயலர் பாலசிங்கம், செயலர் கிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராகவும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.