விளாத்திகுளம் அருகே வி. சுப்பையாபுரத்தில் நிலப்பிரச்னை தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
வி.சுப்பையாபுரத்தைச் சேர்ந்த துரைராஜ் மகன் ரவிச்சந்திரனுக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் முத்துவுக்கும் இடையே நில உரிமை தொடர்பாக பிரச்னை உள்ளதாம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். அப்போது இரு தரப்பைச் சேர்ந்தவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கினராம். இதில் ரவிச்சந்திரன், பாண்டி, சுப்புராஜ் ஆகிய 3 பேர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து, போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்த 3 பேரையும் மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக காடல்குடி காவல்நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு, ராமச்சந்திரன், சுப்புராஜ், பாண்டி, முத்து, கிருஷ்ணமூர்த்தி, அழகுராஜ், தெய்வேந்திரன், பெருமாள் ஆகிய 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும் வழக்கில் தொடர்புடைய முத்து, கிருஷ்ணமூர்த்தி, அழகுராஜ், தெய்வேந்திரன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். தலைமறைவான மற்ற 4 பேரை தேடி வருகின்றனர்.