தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் வேம்பார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் பி. சின்னப்பன் முன்னிலை வகித்தார். அமைச்சர் கடம்பூர் செ. ராஜு மருத்துவ முகாமினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டிருந்த சத்துணவு உணவு பொருள்களின் விழிப்புணர்வு கண்காட்சியை அவர் பார்வையிட்டார். விழாவில் அமைச்சர் பேசியது; விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட சிவஞானபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் விரைவில் அமைக்கப்பட உள்ளது. வட்டார அளவில், கிராம அளவில் நடைபெறும் அரசின் இந்த சிறப்பு மருத்துவ முகாம்களில் பொதுமக்கள், தாய்மார்கள், குழந்தைகள், முதியவர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்றார் அவர். தொடர்ந்து தாய்மார்களுக்கு அம்மா பரிசு பெட்டகத்தையும், கர்ப்பிணிகளுக்கு அம்மா ஊட்டச்சத்து பெட்டகத்தையும் அமைச்சர் வழங்கினார்.
முகாமில், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் பரிதா ஷெரின், சுகாதார பணிகள் துணை இயக்குநர் போஸ்கோ ராஜா, துணை இயக்குநர் (தொழுநோய்) யமுனா, வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல், வட்டார மருத்துவ அலுவலர் இன்பராஜா, அதிமுக நிர்வாகிகள் பால்ராஜ், ஞானகுருசாமி, தனஞ்செயன், குட்லக் செல்வராஜ், கடற்கரைவேல், பள்ளி தலைமையாசிரியர் கஜேந்திர பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.