உடன்குடி அருகே கொட்டங்காடு தேவி பத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழா சனிக்கிழமை நிறைவு பெற்றது.
இக்கோயில் கொடை விழா கடந்த 18ஆம் தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாள்களில் தினமும் அம்மன் உள்பிரகார சப்பர பவனி, ஊஞ்சல் சேவை, சிறப்பு அலங்கார பூஜை, சமயச் சொற்பொழிவு, அன்னதானம், பரதநாட்டியம், பக்தி இன்னிசை, பட்டிமன்றம்,108 திருவிளக்கு பூஜை , அம்மன் சிவப்பு, பச்சை, வெள்ளை சாத்தி பவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வெள்ளிக்கிழமை (செப்.27) நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையைத் தொடர்ந்து யானை முன் வர பவளமுத்து விநாயகரும், பத்திரகாளி அம்மனும் பூஞ்சப்பரத்தில் பவனி தொடங்கியது. பவனி முக்கிய வீதிகள் வழியே சென்று, சனிக்கிழமை (செப்.28) இரவு 10 மணிக்கு கோயிலை அடைந்தது. இதையடுத்து கொடி இறக்குதலுடன் விழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா பெ.சுந்தரஈசன் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.