தூத்துக்குடி மாவட்ட சாரண இயக்கத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விருது வழங்கினார்.
தமிழ்நாடு பாரத சாரண, சாரணீய இயக்கம் சார்பில் சாரண, சாரணீயர்களுக்கு ஆளுநர் விருது ஆண்டுதோறும் வழங்கப் பட்டு வருகிறது. நிகழாண்டு தூத்துக்குடி சி.எம். மேல்நிலைப் பள்ளி மாணவி மனீஷா, புதியம்புத்தூர் ஜான் தி பாப்திஸ்ட் மேல்நிலைப் பள்ளி மாணவர் பி. நவீன்குமார் ஆகியோருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விருது வழங்கிப் பாராட்டு தெரிவித்தார். இதேபோல, மொத்தம் 186 மாணவர்களும், 143 மாணவிகளும் விருது பெற்றனர்.
விருது பெற்ற மாணவர்களை சாரணர் இயக்க மாவட்டச் செயலர் செ. எட்வர்ட் ஜான்சன்பால், மாவட்ட ஆணையர் ரா.சண்முகம், மாவட்ட அமைப்பு ஆணையர்கள் வள்ளியம்மாள், தினேஷ், மாவட்ட பயிற்சி ஆணையர் (சாரணர் பிரிவு) பி. சரவணன், மாவட்ட பயிற்சி ஆணையர் (சாரணீயர் பிரிவு) ஜெயா சண்முகம் ஆகியோர் பாராட்டினர்.