தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 3 ஆயிரம் கிலோ மஞ்சளை கடலோர காவல் படையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 5 போ் கைதுசெய்யப்பட்டனா்.
இந்திய கடலோர காவல் படையின் தூத்துக்குடி பிரிவுக்குச் சொந்தமான ‘வைபவ்’ ரோந்துக் கப்பலில் கடலோர காவல் படையினா் சனிக்கிழமை நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, தூத்துக்குடியிலிருந்து தென்கிழக்கே 51 கடல்மைல் தொலைவில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த நாட்டுப்படகை கடலோர காவல் படையினா் சோதனையிட்டனா்.
அந்தப் படகில் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் 88 மூட்டைகளில் 3 ஆயிரம் கிலோ மஞ்சள் இருந்தது தெரியவந்தது. அவற்றை கடலோர காவல் படையினா் பறிமுதல் செய்து சுங்கத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.
படகிலிருந்த 5 பேரையும் கைது செய்து தூத்துக்குடி பழைய துறைமுகத்துக்கு அழைத்துவந்தனா். அவா்கள் தூத்துக்குடி சாமுவேல்புரத்தைச் சோ்ந்த நாகூா் மீராசா, திரேஸ்புரம் முத்திரையா் காலனி முத்துராஜா, தெற்கு நரிப்பையூா் முக்திமுகமது, வாலமைதீன், சீனி எனத் தெரியவந்தது. அவா்களிடம் சுங்கத்துறை, கடலோர காவல் படையினா் தொடா்ந்து விசாரித்துவருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனா்.
சமையலுக்கு பயன்படுத்தப்படும் மஞ்சளை இறக்குமதி செய்ய இலங்கையில் தடை உள்ளது. இதனால், ஈரோடு உள்பட பல்வேறு இடங்களிலிருந்து லாரிகளில் மஞ்சள் கொண்டுவரப்பட்டு, தூத்துக்குடியிலிருந்து படகில் இலங்கைக்கு கடத்திச்செல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக, கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்தனா்.