கோவில்பட்டி: கடம்பூர் குறுவட்டத்துக்கு உள்பட்ட கிராமப்பகுதி விவசாயிகளுக்கு 2019-2020ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி நூதனப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கடம்பூர் குறுவட்டத்துக்கு உள்பட்ட கே.சிதம்பராபுரம், குப்பனாபுரம், ஒட்டுடன்பட்டி, சங்கரப்பேரி, ஓனமாகுளம், இளவேளங்கால் உள்ளிட்ட பகுதி விவசாயிகளுக்கு 2019-2020ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை தற்போது வரை வழங்கப்படவில்லை.
மேலும் தற்போது பருவமழை பின்தங்கிய காரணத்தினாலும், மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல், உளுந்து, பாசி, ஒருவித மஞ்சள் நோயினால் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
எனவே, விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். 2019-2020-ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டத் துணைத் தலைவர் அய்யலுசாமி தலைமையில், கட்சியின் வடக்கு மாவட்டப் பொதுசெயலர் முத்து, கயத்தாறு ஒன்றியத் தலைவர் செல்லத்துரை, வர்த்தகப் பிரிவு வடக்கு மாவட்டத் தலைவர் ராஜா, சேவா தள வடக்கு மாவட்டத் தலைவர் சக்தி ஆகியோர் அங்கப்பிரதட்சணம் செய்து, கோரிக்கை மனுவை கோட்டாட்சியர் அலுவலக தலைமை எழுத்தர் நிஷாந்தினியிடம் வழங்கினர்.
பின்னர் போராட்டக் குழுவினர், செய்தியாளர்களிடம் கூறுகையில், கோரிக்கையை வலியுறுத்தி ஜனவரி 5-ஆம் தேதி கடம்பூரில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களையும் விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தார்.