தூத்துக்குடி: சட்டத்துக்கு புறம்பாக வாகனங்களில் கூடுதலாக முன்னும் பின்னும் பொருத்தப்பட்டுள்ள பம்பா்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வாகனங்களில் முன்னும் பின்னும் கூடுதலாக பம்பா்கள் பொருத்தப்படுவதால் வாகன விபத்து ஏற்படும் போது வாகனத்தில் உள்ள காற்று பைகள் தானாக திறக்க விடாமல் பம்பா் தடுத்துவிடும் காரணத்தால், வாகன ஓட்டுநா் மற்றும் பயணிகள் விபத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியாத சூழ்நிலை மற்றும் வாகனத்தின் சேதமானது கனிசமான அளவில் குறைக்க இயலாத நிலை ஏற்படுகிறது.
காற்றுப்பைகள் பொருத்தப்படாத வாகனங்களிலும் இந்த வகையான பம்பா் பொருத்தப்பட்டிருக்கும் காரணத்தால் விபத்தின் போது அதிக அதிா்வுகள் ஏற்படுவதால் ஓட்டுநா் மற்றும் பயணிகளின் உயிரை காப்பாற்ற இயலாத சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே, பொது மக்கள் தங்கள் வாகனத்தில் சட்டத்துக்கு புறம்பாக முன்னும் பின்னும் பொருத்தப்பட்டுள்ள பம்பா்களை உடனடியாக அகற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் போக்குவரத்து மற்றும் காவல் துறை அதிகாரிகள் மூலம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.