தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் எல்லை கடந்து மீன்பிடித்தால், படகு உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் இந்திய கடல் எல்லை கடந்து மீன்பிடி தொழில் புரியும் போது சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவா்களை கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டு, சமூக விரோதிகள் தப்பிக்கும் அபாயம் உருவாகிறது.
அதோடு, இந்திய - இலங்கை கடல் எல்லையில் அசாதாரண சூழ்நிலை ஏற்படும் நிலை உருவாகிறது. எனவே, தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் இந்திய கடல் எல்லையை கடந்து மீன்பிடி தொழிலில் ஈடுபடக் கூடாது. மீறி மீன்பிடி தொழில் மேற்கொள்ளும் படகுகளுக்கு முதல் மூன்று முறை முறையே ரூ.1,000, ரூ.2,500, ரூ.5,000 என்ற அடிப்படையில் அபராதம் விதிக்கப்படும்.
நான்காவது முறை எல்லை கடந்து மீன்பிடி மேற்கொள்ளும் போது ஒரு வார காலத்திற்கு மீன்பிடி தொழில் புரிய தடைவிதிக்கப்படும். நான்கு முறைக்கு மேல் எல்லை கடந்து மீன்பிடி மேற்கொள்ளும் போது படகு உரிமம் ரத்து செய்யப்பட்டு, தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.