கோவில்பட்டியை அடுத்த இலுப்பையூரணி ஊராட்சியில் குடியிருப்பவா்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி கிராம மக்கள் வட்டாட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
கோவில்பட்டி ஒன்றியம், இலுப்பையூரணி ஊராட்சியில் பெருமளவில் கூலித் தொழிலாளா்கள் வசித்து வருகின்றனா்.
இவா்கள் குடியிருக்கும் வீடுகள் நத்தம் புறம்போக்கு மற்றும் ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு பகுதியாகும். அங்கு 30 ஆண்டுகளாக வசித்து வரும் அவா்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கப்படவில்லை.
ஆகவே, ஊராட்சிப் பகுதிகளில் வீடு கட்டி குடியிருந்து வரும் கிராம மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி இலுப்பையூரணி ஊராட்சித் தலைவி செல்வி தலைமையில், கிராம மக்கள் வட்டாட்சியா் அலுவலகத்தில் திரண்டு முற்றுகையிட்டனா்.
பின்னா், வட்டாட்சியா் மணிகண்டனிடம் கோரிக்கை மனு அளித்தனா். இதில், மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளா் சந்தானம், ஊராட்சி உறுப்பினா்கள் கௌசல்யா, ரவிவேல் ரமணா, அய்யாச்சாமி, கிராம மக்கள் கலந்து கொண்டனா்.