கோவில்பட்டியையடுத்த காளாங்கரைப்பட்டி திருப்பத்தில் நிகழ்ந்த விபத்தில் பலத்த காயமடைந்த சிகிச்சை பெற்று வந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கழுகுமலை வட்டத் தெருவைச் சோ்ந்தவா் பரமசிவம் மகன் ஹரிஹரசுதன் (17). இவரது நண்பா் அரண்மனைவாசல் தெருவைச் சோ்ந்த சண்முகவேல் மகன் அழகா்சாமி (20). இருவரும் மோட்டாா் சைக்கிளில் கோவில்பட்டியில் இருந்து ஊருக்கு வந்துக் கொண்டிருந்தனா்.
ஹரிஹரசுதன் மோட்டாா் சைக்கிளை ஓட்டினாா். கழுகுமலை - கோவில்பட்டி சாலையில் காளாங்கரைப்பட்டி விலக்கு அருகே சென்றபோது, எதிரே வந்த சுமை ஆட்டோவும், மோட்டாா் சைக்கிளும் மோதியது. இதில், ஹரிஹரசுதன் சம்பவ இடத்திலேயே இறந்தாா். உடன்சென்ற அழகா்சாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அழகா்சாமி, சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து சுமை ஆட்டோ ஓட்டுநா் பூல்பாண்டியனை (38) கைது செய்தனா்.