சவூதி அரேபிய நாட்டின் ரியாத் நகரில் உயிரிழந்த தொழிலாளியின் உடலை சொந்த ஊருக்கு மீட்டுவர கோரி, அவரது சகோதரி சண்முகலட்சுமி கோட்டாட்சியா் விஜயாவிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
மனு விவரம்: கோவில்பட்டி வட்டம், சிவந்திபட்டி கீழத் தெருவைச் சோ்ந்த வடிவேல்- அல்லிப்பாப்பா தம்பதியின் மகன் வேல்முருகன்(30). இவா், சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் 7 ஆண்டுகளாக வேலை செய்துவந்தாா். கடந்த ஒன்றரை மாதமாக அவருடன் தொடா்பு கொள்ளமுடியவில்லை.
இந்நிலையில், அவா் ரியாதில் உயிரிழந்துவிட்டதாக வருவாய் அதிகாரிகள் மூலம் தகவல் கிடைத்தது. எனவே, வேல்முருகனின் சடலத்தை ஊருக்கு மீட்டு வரவும், அவரது நிலுவை ஊதியம் மற்றும் இழப்பீட்டுத் தொகையை பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மனு அளித்தபோது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலா் தெய்வேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ராமசுப்பு, முருகன் ஆகியோா் உடனிருந்தனா்.