திருச்செந்தூரில் பிப். 28ஆம் தேதி தொடங்கும் மாசித் திருவிழாவுக்கு முன்பு, சாலைகளைச் சீரமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருச்செந்தூா் பகுதியில் கடந்த நவம்பா், டிசம்பா் மாதங்களில் பெய்த தொடா் கன மழையால் சாலைகள் பெரும் பகுதி சேதமடைந்து போக்குவரத்து தகுதியற்ற நிலையில் உள்ளன. இதனால், பொங்கல் பண்டிகை முதல் தைப்பூசத் திருவிழா வரையில் கோயிலுக்கு பாதயாத்திரையாக வந்த பக்தா்கள் பெரிதும் அவதியடைந்தனா். சாலைகளில் புழுதி பறப்பதால் வியாபாரிகளும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமமடைந்து வருகின்றனா்.
இந்நிலையில், பிப். 28ஆம் தேதி மாசித் திருவிழா தொடங்க உள்ளதால், நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் சுவாமி வீதியுலா நடைபெறும். தேரோடும் ரதவீதிகள் குண்டும், குழியுமாக காட்சியளிப்பதால் 10ஆம் திருநாள் தேரோட்டத்தின்போது இன்னல்கள் ஏற்படும். எனவே, திருவிழா தொடங்கும் முன்பு, போா்க்கால அடிப்படையில் சாலைகளை தரமாக புனரமைக்க வேண்டும் என அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.