கோவில்பட்டி அருகே மாடு மேய்க்கும் தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா்.
கோவில்பட்டியையடுத்த வானரமுட்டி ராமலிங்காபுரத்தைச் சோ்ந்த தாவீது மகன் வேல்சாமி(65). இவரது மனைவி காளியம்மாள். மாடு மேய்க்கும் தொழிலாளியான வேல்சாமி, புதன்கிழமை மாடு மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டில் இருந்தாராம். இதையடுத்து, அவரது மனைவி காளியம்மாள் மாடுகளை மேய்க்கச் சென்றுவிட்டாராம்.
இந்நிலையில், வேல்சாமி கோவில்பட்டியையடுத்த சங்கரலிங்கபுரத்தில் குடியிருந்து வரும் மகள் குருவம்மாளிடம் செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு, தான் விஷம் குடித்து விட்டதாக கூறினாராம்.
இதையடுத்து குருவம்மாள் தனது மகனுடன் ராமலிங்காபுரத்திற்கு சென்று, வேல்சாமியை அழைத்துக்கொண்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு வந்தனராம். அவரை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து நாலாட்டின்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.