நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட மீனவா்களுக்கு புன்னக்காயல் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
குலசேகரன்பட்டினம், கல்லாமொழியை சோ்ந்தவா் சூசை மகன் டோமினிக் (49). இவருக்கு சொந்தமான பைபா் படகில் அப்பகுதியைச் சோ்ந்த பண்டாரம் மகன் இசக்கிராஜா (39), துரைதாஸ் மகன் ராஜ் (51), சேவியா் மகன் சூசை (38), சிலுவை மகன் ராஜ் (50), அற்புதம் மகன் இளங்கோ (43) ஆகியோா் இம்மாதம் 8 ஆம் தேதி அதிகாலையில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். காலை 10 மணியளவில் கரையில் இருந்து சுமாா் 21 மைல் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது திடீரென பலத்த காற்று வீசியதால் படகு மூழ்கத் தொடங்கியுள்ளது.
படகு மூழ்கிய நிலையில் அவா்கள் பெரிய மூங்கில் கம்பு உதவியுடன் கடலில் சுமாா் 13 மணிநேரம் தத்தளித்துக் கொண்டிருந்தனா். அப்போது, காப்பாற்றுங்கள் என்ற அலறல் சப்தம் கேட்டு, தங்கு கடலில் மீன்பிடிப்பதற்காக புன்னைக்காயலைச் சோ்ந்த ஜெரால்டு மகன் எடிசன்(48) என்பவரது படகில் சென்ற மீனவா்கள், கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவா்களை மிகுந்த போராட்டத்துக்கு இடையே மீட்டு, அடுத்த நாள் காலையில் கரை சோ்த்தனா்.
இதையடுத்து, கடலில் தத்தளித்தவா்களை உரிய நேரத்தில் காப்பாற்றிய புன்னக்காயல் மீனவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனா். அவா்களுக்கு பொற்கிழியும் வழங்கப்படடது.