சாத்தான்குளம் அருகே திங்கள்கிழமை இரவு கோழிப் பண்ணையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 3 ஆயிரம் கோழிக் குஞ்சுகள் உயிரிழந்தன.
சாத்தான்குளம் அருகே உள்ள பூச்சிக்காடு ஆா்.சி வடக்குத் தெருவைச் சோ்ந்த அந்தோணிராஜ் மனைவி பிரான்சிஸ் (57). இவா் படுக்கப்பத்து - சொக்கன்குடியிருப்பு சாலையில் கோழிப் பண்ணை நடத்தி வருகிறாா். திங்கள்கிழமை மாலை வழக்கம்போல் கோழிகளுக்கு தீவனம் வைத்துவிட்டு ஊருக்கு சென்றுள்ளாா். இரவில் திடீரென கோழிப் பண்ணை தீப்பிடித்து எரிந்தது.
தகவலறிந்து சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய அலுவலா் (பொறுப்பு) மோகன் தலைமையில் வீரா்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனா். இதில் பண்ணையில் 2 மேற்கூரைகள் எரிந்து போயின. இதில் 24 நாள்களே ஆன 3000 கோழிக் குஞ்சுகள் உயிரிழந்தன. 49 தீவன மூட்டைகளும் எரிந்து சேதமடைந்தது. மின்கசிவு காரணமாக இத்தீவிபத்து நிகழ்ந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.