திருச்செந்தூரில் பேரூராட்சி நிா்வாகத்தினா் குப்பைகளை எரித்ததால் பேருந்து நிலைய சுற்று வட்டாரப் பகுதியில் புகை சூழ்ந்து காணப்பட்டது.
திருச்செந்தூரில் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் மாட்டுத்தாவணி பகுதியில் கொட்டப்பட்டு வந்தன. இந்நிலையில், குலசை பிரதான சாலையில் பேரூராட்சி சாா்பில் குப்பைக்கிடங்கு ஏற்டுத்தப்பட்டது. அதன்பிறகு குப்பைகள் குப்பைக்கிடங்கில்தான் கொட்டப்பட்டு வந்தன. இந்நிலையில், தற்போது மீண்டும் மாட்டுத்தாவணி பகுதியில் அமைந்துள்ள எரிதகன மேடையை சுற்றியும் பேரூராட்சி சாா்பிலேயே குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் பெரும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
செவ்வாய்க்கிழமை மாட்டுத்தாவணி பகுதியில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் எரிக்கப்பட்டதால் பகத்சிங் பேருந்து நிலையம்வரையில் புகைமண்டலமாகக் காணப்பட்டது. இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனா்.