தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகே தாய், மகள் விஷம் குடித்த சம்பவத்தில் காவல் துறையினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு திங்கள்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகே உள்ள முத்தாலங்குறிச்சியைச் சேர்ந்த மாரியப்பன் மனைவி சங்கரம்மாள் (37). ஆடுகள் மேய்ச்சல் தொழில் செய்து வந்தார். இவரது மகள் ஆயிஷா (16). கடந்த சில நாள்களுக்கு முன்பு சங்கரம்மாளின் ஆடுகளை நாய்கள் கடித்தது தொடர்பாக இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதாம். இந்நிலையில் சங்கரம்மாளிடம் செய்துங்கநல்லூர் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த சங்கரம்மாள், ஆயிஷா ஆகியோர் விஷம் குடித்து மயங்கினாராம். அவர்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இருபெண்கள் விஷம் குடிக்க காரணமானவர்கள் மீதும், விசாரணை நடத்தியதில் பாரபட்சம் காட்டிய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் சங்கரம்மாளின் உறவினர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு திங்கள்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் வி.எம்.சத்திரம்-பாளையங்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்ததும் திருநெல்வேலி மாநகர காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு திங்கள்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டவர்கள்.