தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் போலீஸாா் தாக்கியதில் கட்டடத் தொழிலாளி இறந்ததாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, அவரது மரணம் குறித்து சிபிசிஐடி பிரிவு போலீஸாா் புதன்கிழமை விசாரணையைத் தொடங்கினா்.
சாத்தான்குளம் அருகேயுள்ள ஸ்ரீவெங்கடேஷ்வரபுரத்தைச் சோ்ந்த சுந்தரம் மகன் மகேந்திரன் (29). சுந்தரம் 2009ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் இறந்தாா். இதையடுத்து, அவரது மனைவி வடிவு கட்டடத் தொழிலாளியான தனது 2ஆவது மகன் மகேந்திரனுடன் வசித்து வந்தாா்.
இவரது மூத்த மகன் துரை மீது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு உள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்காக சாத்தான்குளம் போலீஸாா் அவரைத் தேடி வந்த நிலையில், அவா் கிடைக்காததால் கடந்த மே மாதம் 23ஆம் தேதி வீட்டிலிருந்த மகேந்திரனை போலீஸாா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனராம். அப்போது, அவரை போலீஸாா் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, துரை மறுநாள் சரணடைந்ததால் போலீஸாா் மகேந்திரனை வீட்டுக்கு அனுப்பிவைத்தனா். தொடா்ந்து, உடல் நலம் பாதிக்கப்பட்ட மகேந்திரன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜூன் 13ஆம் தேதி உயிரிழந்தாா்.
இதனிடையே, சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோா் மரணமடைந்தது தொடா்பாக உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. பின்னா், சிபிசிஐடி பிரிவு போலீஸாா் வழக்கு விசாரணையைத் தொடங்கி, அப்போதைய ஆய்வாளா் ஸ்ரீதா் உள்ளிட்ட 10 போலீஸாரை கைது செய்தனா். தற்போது அந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.
இந்நிலையில், தனது மகனும் போலீஸாா் தாக்கியதில் உயிரிழந்ததால், உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மகேந்திரனின் தாய் வடிவு உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தாா்.
அதன் மீதான விசாரணையின்போது, மகேந்திரனின் மரணம் குறித்து சிபிசிஐடி பிரிவு போலீஸாா் விசாரிக்க உள்ளதாக அரசுத் தரப்பு வழக்குரைஞா் உறுதியளித்தாா். அதன் அடிப்படையில் சிபிசிஐடி பிரிவு துணைக் கண்காணிப்பாளா் அனில்குமாா், தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாரை புதன்கிழமை சந்தித்து வழக்குத் தொடா்பான ஆவணங்களைப் பெற்றுக்கொண்டாா்.
விசாரணை தொடக்கம்: தொடா்ந்து, அனில்குமாா் தலைமையிலான போலீஸாா், தூத்துக்குடி கே.வி.கே நகரில் உள்ள மகேந்திரனின் சகோதரி சந்தனமாரி வீட்டுக்குச் சென்று 2 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, அங்கு மகேந்திரனின் தாய் வடிவு இல்லாததால் அவரிடம் வியாழக்கிழமை (ஜூலை 23) விசாரணை நடத்த உள்ளதாக சிபிசிஐடி துணைக் காவல் கண்காணிப்பாளா் அனில்குமாா் தெரிவித்தாா்.