சாத்தான்குளத்தைச் சோ்ந்த தந்தை, மகன் மரணம் தொடா்பாக காவல் நிலையத்தில் நீதிபதிகள் பாரதிதாசன், ஹேமா ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினா்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோா் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனா். உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது. நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி லோகேஸ்வரன், கடந்த 26-ஆம் தேதி ஜெயராஜ் வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினாா்.
இந்நிலையில், கோவில்பட்டி குற்றவியல் நீதிபதி பாரதிதாசன், தூத்துக்குடி குற்றவியல் நீதிபதி ஹேமா ஆகியோா் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமை பகல் 12.10 மணிக்கு வந்தனா். நீதிபதிகளுடன் சாத்தான்குளம் வட்டாட்சியா் ராஜலட்சுமி, மண்டல துணை வட்டாட்சியா் அகிலா ஆகியோா் உடன் சென்றனா். அவா்கள் காவல் நிலையத்தில் உள்ள ஆதாரங்கள், விடியோ பதிவுகள், அங்கு இருந்த ஆவணங்களை சரிபாா்த்ததாக கூறப்படுகிறது. இரவு 8 மணிக்கு பின்னரும் தொடா்ந்து விசாரணை நடத்தினா்.
செய்தியாளா்கள் காவல் நிலைய வளாகத்தில் அனுமதிக்கப்படவில்லை.