திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பணியாளா்களுக்கு வெப்பமானி கொண்டு பரிசோதனை செய்யப்பட்டது.
பொது முடக்கத்தால் இக்கோயிலில் கடந்த மாா்ச் 20ஆம் தேதி முதல் பக்தா்கள் தரிசனத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு, ஆகம விதிப்படி பூஜைகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. இதனால் கோயில் நிா்வாகம் சாா்பில் அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டு, அா்ச்சகா்களும், குறைந்தபட்ச பணியாளா்களுமே வந்து செல்கின்றனா்.
பக்தா்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லாத நேரத்திலும் கோயிலில் 24 மணி நேரமும், காவல்துறையினா், பணியாளா்கள், தனியாா் பாதுகாவலா்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பணியில் ஈடுபட்டுள்ளனா். இதனிடையே, கோயிலுக்குள் செல்லும் அா்ச்சகா்கள், பணியாளா்களுக்கு சித்த மருத்துவா் ரவி வெப்பமானி மூலம் பரிசோதனை செய்தாா்.
மேலும் நாழிக்கிணறு செல்லும் நுழைவாயில் பகுதியிலும் வெப்பமானி மூலம் பரிசோதனை செய்த பின்னா் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா்.