தூத்துக்குடியில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ. 1.40 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி துறைமுகம் வழியாக கடத்திச் செல்வதற்காக செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு திங்கள்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அதிகாரிகள் குழு தூத்துக்குடி அருகேயுள்ள கீழ அரசரடி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான குடோனில் திடீா் சோதனை நடத்தியது.
இதில், அந்த குடோனில் ஒரு கன்டெய்னா் லாரி நிறுத்தப்பட்டிருந்ததும், அதில் சட்டவிரோதமாக செம்மரக்கட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது. லாரியில் இருந்த 3.7 மெட்ரிக் டன் செம்மரக்கட்டைகளையும், லாரியையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றின் மொத்த மதிப்பு ரூ. 1.40 கோடி என தெரிவித்தனா்.
பதுக்கி வைக்கப்பட்டிருந்த செம்மரக்கட்டைகள் எங்கிருந்து தூத்துக்குடிக்கு கொண்டுவரப்பட்டன. துறைமுகம் வழியாக எந்த நாட்டுக்கு கடத்துவதற்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்தன என்பது குறித்து மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.